ஞாயிறு, 20 மார்ச், 2022

நம் பள்ளி, நம் உரிமை....

 


             ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (20.03.2022) பெற்றோர் ஆசிரியர் கழக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

     இதில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  அதில்  அவர் பள்ளியின் இன்றைய வளர்ச்சி நிலைகள், மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பான பல பிரச்சனைகள் பற்றி விரிவாகப் பேசினார்.  அத்தோடு பள்ளியின் இன்றைய அடிப்படைத் தேவைகளான குடிநீர், வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவர் மேம்பாடு குறித்தும் வேண்டுகோள் விடுத்தார்.

            மேலும் இன்றைய சிறப்புக் கூட்டத்திற்கான காரணத்தை விளக்கும் போது பள்ளி மேலாண்மைக் குழு என்பது என்ன, அதன் கடமைகள், பொறுப்புகள், அதன் அமைப்பு முறை மற்றும் அவசியம் ஆகியன பற்றி விரிவாகப் பேசினார். 

                     தொடர்ந்து பெற்றோர்கள் பேசும் போது பள்ளியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி கருத்து தெரிவித்து பள்ளியில்  போதுமான ஆசிரியர்கள் மற்றும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உடற் கல்விக்கென தனி ஆசிரியர் நியமனம் போன்றவற்றை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டனர், தற்காலிக ஏற்பாடாக தற்போது தலைமை அசிரியரால் ஓர் ஆசிரியர் தற்காலிக பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு,  மாணவர் எண்ணிக்கை கருத்தில் கொண்டு, மேலும் ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க ஊராட்சி மன்றத் தலைவர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

                  பின்னர் பேசிய கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன் அவர்கள் பேசும்போது பெற்றோர்களின் கோரிக்கைகள் ஏற்று ஓர் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதாக கூறினார். தொடர்ந்து அவர் பேசும் போது அடுத்த நிதியாண்டு முதல் இவ் ஊராட்சியில் நடைமுறைக்கு வர உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் பள்ளி அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக புதிய வகுப்பறைக் கட்டடம்,  குடிநீர் வசதி, சுற்றுச் சுவர் வசதி ஆகியவற்றை மேம்படுத்தித் தருவதாக ஒப்புதல் அளித்தார்.

            கூட்டத்தில் நாச்சகவுண்டனூர் வார்டு உறுப்பினர் விஜயகுமாரி பிரகாஷ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பெ.தேன்மொழி உள்ளிட்ட அனைத்து பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, திரு ச.மஞ்சுநாதன், திரு பூ.ராம்குமார் ஆகியோரும், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களும்  கலந்துகொண்டனர். 

             இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.



















சனி, 9 ஜனவரி, 2021

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்

 

 

      

    கிருஷ்ணகிரி  மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (07.01.2021) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னதாக அனைவருக்கும்  கொரோனா கால சிறப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்கும் வகையில் சுகாதார திரவம் மற்றும் முகக் கவசங்கள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.

பின்னர்  சமூக  இடைவெளி கடைபிடித்து அனைவருக்கும் இருக்கைகள் அமைத்துக் கொடுத்து பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் திரு செஇராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் தற்போதைய கொரோனா கால பள்ளியின்  செயல்பாடுகள்  மற்றும்  பள்ளி மேலாண்மைக் குழுவின் அவசியம் பற்றியும்  விரிவாக  எடுத்துக் கூறினார் 

 பின்னர்  உதவி ஆசிரியர்கள் திரு சி. ஆனந்தகோபாலகிருஷ்ண மூர்த்தி, திரு பூ. இராம்குமார் ஆகியோர் பயிற்சி முகாமுக்கான கருத்துக்களை வழங்கினர்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி குஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி உள்ளிட்ட  அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ஜி.எம். சிவக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.....































சனி, 15 ஆகஸ்ட், 2020

மாணவர்கள் இல்லா சுதந்திர நாள் விழாக் கொடியேற்றம்.....




            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.08.2020, இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர நாள் கருத்துரை நிகழ்த்தினார். பின்னர் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களால் மரக் கன்றுகள் மூலிகைச் செடிகள் நடப்பட்டது. நிகழ்வில் பள்ளி உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்