திங்கள், 25 மார்ச், 2019

பள்ளிக்கு கல்விசீர் வழங்கும் விழா, முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா



கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (23.03.2019)  பள்ளிக்கு கல்விசீர் வழங்கும் விழா,  முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முன்னதாக பள்ளி பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு .இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
     ஊத்தங்கரை ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு இரா. சங்கர் கல்விசீர் வழங்கும் விழாவைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.. இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மகளிர் சங்கப் பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள், ஊத்தங்கரை ஜெயம் ஹார்டுவேர்ஸ், ஜெசிந்தா மெட்டல் மார்ட், அக்பர் ஷூ மார்ட், மற்றும் ஜே.ஆர்.சி ஆசிரியர் கணேசன், காவல் உதவி ஆய்வாளர் திரு குமார், முன்னால் கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி.பூபதி உள்ளிட்ட பலரும் பள்ளிக்குத் தேவையான ஒலிவாங்கி, ஒலிபெருக்கி கருவி, நாற்காலிகள், குழந்தைகளுக்கான நாற்காலிகள், ஸ்டூல்கள், மின் விசிறிகள், சுவர் கடிகாரங்கள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள், தட்டு, டம்ளர், பித்தளை குத்துவிளக்குகள், குடிநீர் டிரம், உலக உருண்டை, கற்றல்/கற்பித்தல் பொருட்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள், பாய்கள், குழந்தைகளுக்கான செருப்புகள் என சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பள்ளிக்கு வழங்கினர்.
     அடுத்து ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலர் திரு என்.ஏ.பி. நாசர் அவர்கள் முதல் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கையை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது துரிஞ்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கா.க சாந்தி, கொட்டுகாரம்பட்டி உதவி ஆசிரியர் திரு சே. லீலாகிருஷ்ணன், உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார், திருமதி ந. திலகா ஆகியோர் பள்ளி புரவலர் நிதி வழங்கினர்.
     தொடர்ந்து இப்பள்ளியில் இணையம் மூலம் நேரலை ஆங்கில வகுப்பை நடத்திடும்  கோவை காக்னிஜெண்ட் பணியாளர்கள் திரு விக்ணேஷ்வரன், திரு கபிலன், செல்வி சரண்யா, செல்வி ஸ்ரீமதி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேஸ்வரி அவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு சிறப்பு உரை நிகழ்த்தினார்.   
     விழாவில் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் திரு ப. சிவப்பிரகாசம், திருமதி இரா. வசந்தி, துரிஞ்சிப்பட்டி தலைமை ஆசிரியர் திருமதி கா.க. சாந்தி, கொட்டுகாரம்பட்டி உதவி ஆசிரியர் திரு சே. லீலாகிருஷ்ணன், உதவி ஆசிரியர்கள் பூ. இராம்குமார், திருமதி ந. திலகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
     விழாவின் இடையிடையே பள்ளி மாணவர்களின் பேச்சு, பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
     மேலும் விழாவில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் திருமதி மு. அம்பிகா, சத்துணவு அமைப்பாளர் திரு பீமன், சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர்களும், கிராமப் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி த. லதா அனைவருக்கும் நன்றி கூறினார்.