சனி, 23 ஏப்ரல், 2022

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம்

 

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (23.04.2022) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊத்தங்கரை ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருமதி இரா. வசந்தி சிறப்புப் பார்வையாளராகக் கலந்துக் கொண்டார். மேலும் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சித் தலைவர்  திரு. தி. வெங்கடேசன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி, துணைத் தலைவர் திருமதி மு. அம்பிகா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு கோ. தேவராஜ், திருமதி பி. விஜயகுமாரி பிரகாஷ், ஆகியோரும் , பள்ளி உதவி ஆசிரியர்களான திருமதி மு. இலட்சுமி, திரு. வே இராஜ்குமார், திரு ச. மஞ்சுநாதன், திரு பூ. இராம்குமார் உள்ளிட்ட அனைத்து பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தமது உரையில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழு பற்றியும், அது தற்போது மறு கட்டமைப்பு செய்யப்படுவதன் அவசியம் பற்றியும்  எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளியின் தற்போதைய மாணவர்கள் கல்வி வளர்ச்சி, பள்ளி கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்தும் அதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தமிழ்,ஆங்கில செய்தித்தாள் வாசித்தல்,  ஆயகலைகள் 64, தமிழக மாவட்டங்கள் சொல்லுதல் 118 தனிம வரிசைக் குறியீடுகள் ஒப்புவித்தல், தமிழ் கவிதை வாசித்தல் என தமது திறன்களை பெற்றோர்கள் முன்பாக வெளிப்படுத்தினர்.

பின்னர் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறு கட்டமைப்பிற்கான தேர்வு நடைபெற்றது. இதில் அனைத்து பெற்றோர்களின் ஒருமித்த ஆதரவோடு திருமதி ஜெ. நாச்சி தலைவராகவும், திருமதி அ. சங்கீதா துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர், தொடர்ந்து குழு உறுப்பினர்களாக திருமதி பு. பசுமதி, க. உமா, கி.ரேவதி, உ. வைஜெயந்தி, க. முனியம்மாள், சா. அனிதா, மோ.ஐஸ்வர்யா, வே. கீதா, தா. பாரதி, ச. முனியம்மாள், க. புவணேஸ்வரி, கா. கோகிலா, கோ. சென்பகம் ஆகியோரும் ஊராட்சி மன்றக் பிரதிதிகளாக திரு கோ. தேவராஜ், திருமதி பி. விஜயகுமாரி பிரகாஷ் ஆகியோரும், கல்வியாளராக திரு க. சதீஷ்குமார் அவர்களும், ஆசிரியப் பிரதிநிதியாக திரு மு. இலட்சுமி ஆகியோரும், செயலாளராக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகியோரும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தமது உரையில் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவரும் பள்ளியின் வளர்ச்சிக்கு தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமெனவும், பள்ளியின் தேவைகளுக்கு தொடர்ந்து ஊராட்சி மன்றம் மூலம் உதவிடுவதாகவும் கூறினார்.

அடுத்து பேசிய ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருமதி இரா. வசந்தி அவர்கள் தமது உரையில் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த பள்ளியாக தற்போது திகழ்ந்து வரும் ஜோதிநகர் பள்ளி மேலௌம் சிறப்பு பெற தற்போது தேர்வு பெற்றுள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பணியாற்றிட வேண்டுமெனவும், பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

இறுதியில் இன்றைய நிகழ்வின் நினைவாக பள்ளி வளாகத்தில் நாவல் மரக் கன்று ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருமதி இரா. வசந்தி அவர்களால் நடப்பட்டது..