வெள்ளி, 28 ஏப்ரல், 2023

2022 – 23 கல்வியாண்டு நிறைவு விழா, சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா உள்ளிட்ட முப்பெரும் விழா……

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (28.04.2023) 2022 – 23 கல்வியாண்டு நிறைவு விழா, சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா உள்ளிட்ட முப்பெரும் விழா…… நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் இன்று கல்வியாண்டின் நிறைவு நாள் என்பதாலும். நாளை முதல் பள்ளிக்கு கோடை விடுமுறை விடுவதாலும் அதைக் கொண்டாடும் வகையில், பள்ளிக்கு பலவண்ண ஆடையில் வந்து, பட்டாம் பூச்சிகளாய் காட்சி அளித்தனர் காலை இறை வணக்கக் கூட்டத்தில்…… பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்று இன்றைய நாளின் விழா குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தமது தலைமை உரையில் இவ்வாண்டு பள்ளியில் நடைபெற்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் குறித்தும், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றமை குறித்தும் விளக்கிப் பேசினார் மேலும் அடுத்த ஆண்டு பள்ளியில் செயல்படுத்தப் போகும் பல்வேறு புதிய கற்றல்/கற்பித்தல் செயல்பாடுகள், நடத்தப்பட உள்ள பாடம் சார்ந்த இணைச் செயல்பாடுகளின் மூலமாக நடைபெற உள்ள திறன் வளர் போட்டிகள், பாடம் சார்ந்த மன்றச் செயல்பாடுகள், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், சாரனர் இயக்கம், சுற்றுச் சூழல் மன்றம் போன்ற அமைப்புகள், அதில் மாணவர்களின் பங்கேற்பு உள்ளிட்ட செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். மேலும் இங்கு எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்குச் செல்ல உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், அங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார். தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், வகுப்பு வாரியாக சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகளும், எட்டாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களின் பங்கேற்போடு நான்கு வகையான அணிச்சல்கள் (கேக்குகள்) வெட்டப்பட்டு அணைத்து மாண்வர்களுக்கும் வழங்கப்பட்டது. இறுதியாக பள்ளி உதவி ஆசிரியர் வெ. சண்முகம் மாணவர்களுக்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு அறிவுரைகளைக் கூறி அனைவருக்கும் நன்றி கூறினார்.