வியாழன், 28 பிப்ரவரி, 2019

தேசிய அறிவியல் நாள் விழா



இன்று 28.02.2019 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு குறித்து பல தகவல்களைக் கூறி அனைவரையும் வரவேற்றார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று நாடு முழுமையும் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் இந்தியாவிலேயே முழுமையான கல்வியைப் பயின்று,  உலகின் மிக உயரிய நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி. இராமன்,  அவர்களைப் போற்றும் வகையிலும் அவரின் சாதனைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும் இந்திய அரசு 1977 முதல் இந்த விழாவை கொண்டாடி வருவது குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பல்வேறு அறிவியல் சோதனைகளைச் செய்து காட்டினர். அறிவியல் வளர்ச்சியின் அவசியம் குறித்தும் பேசினர். 118 தனிமங்களின் பெயர்களை அவற்றின் குறியீட்டோடு குறிப்பிட்டு எட்டாம் வகுப்பு மாணவி ச. இனியா பார்க்காமல் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, ந. திலகா, பூ. இராம்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது..
                இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி ச, இனியா அனைவருக்கும் நன்றி கூறினார்.








































வெள்ளி, 11 ஜனவரி, 2019

பொங்கல் விழா - 2019




எமது பள்ளியில் ( ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம் ) இன்று (11.01.2109) பொங்கல் விழா மிகச்      சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்களின் பங்கேற்போடு துவங்கிய இவ்விழா ஆசிரியர்களின் மேற்பார்வையில் மிகச்சிறப்பாக கிராமத்து திருவிழாவாகவும், இயற்கையைப் போற்றும் விழாவான சூரியனை வழிபடும் விழாவாகவும் துவங்கியது. விழாவில் மாணவர்கள் மிகவும் மகிழ்வோடும், ஆர்வத்தோடும் பங்கேற்றனர். அப்போது செங்கரும்பு, மஞ்சள், பூசணி ஆகியவற்றையும், பல வண்ண பலூன்களையும்  மாணவர்களே கொண்டுவந்து பூசையில் வைத்தும் புதுப் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்வில் பங்கேற்றும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய ஆடைகளான பாவாடை – சட்டை, வேட்டி – சட்டை மற்றும் புடவை – ஜாக்கட் ஆகியவற்றில் வந்து நிகழ்வில் பங்கேற்றது அனைவரையும் மகிழச் செய்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, த. லதா, ந. திலகா ஆகியோர்  செய்திருந்தனர்.
                விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருமதி கோ. மாதேஸ்வரி, திரு என்.ஏ.பி. நாசர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
     மேலும் நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கு. ஆனந்தி,  தற்காலிக ஆசிரியர் அ. பவித்ரா, சத்துணவு அமைப்பாளர் பீமன் மற்றும் பெற்றோர்களும் பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.
     பள்ளி மாணவர்களுக்கு கோலப் போட்டி மற்ரும் விளையாட்டுப் போட்டிகள் வைத்து பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.