புதன், 2 மார்ச், 2016

தமிழ் இணையப் பயிலரங்கு........


கிருஷ்ணகிரி, தருமபுரி  மாவட்டங்களில் பணிபுரியும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 33 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான 10 நாள் தலைமைப் பண்பு வளர் பயிற்சி  கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலக பயிற்சி அரங்கில் நடைபெற்றது.
இதில் ஒருநாள் நிகழ்வாக தமிழும் – இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயிலரங்கை நான் நடத்தினேன்.
அதில் தமிழ் இணைய தோற்றம், வளர்ச்சி, தற்போதைய நிலை, எதிர்காலத் தேவை, பள்ளிக் கல்வியில் இதன் பயன்பாடு என்ற அளவில் மிக விரிவாக படக்காட்சிகளோடு விளக்கினேன்.
பின்னர் மின்னஞ்சல் உருவாக்கம், அதன் மூலம் வலைப்பூ உருவாக்கம், அதை பள்ளிக் கல்வி, மாணவர் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து செயல் விளக்கமும், நேரடியாக வலைப்பூ உருவாக்கி அதில் படங்களையும், செய்திகளையும் பதிவேற்றம் செய்து காண்பிக்கப்பட்டது. இது அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளித்தது.
பின்னர் தமிழ் விக்கிபீடியா தொடர்பான பல்வேறு செய்திகளையும் அதில் நாம் நமது படைப்புகளை உள்ளீடு செய்வது பற்றியும் விரிவாக விளக்கினேன்.  
தொடந்து கற்றல்/கற்பித்தலுக்கு பயன் தரும் இணையதளங்கள் 50க்கும் மேற்பட்டவை அறிமுகம் செய்யப்பட்டது.





















திங்கள், 29 பிப்ரவரி, 2016

தேசிய அறிவியல் நாள் விழா




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு, முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் அதற்குக் காரணமாக அமைந்த, இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற அறிவியல்  அறிஞர் திரு சர்.சி.வி. இராமன் அவர்களைப் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, அவரின் ”இராமன் விளைவு” எனும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட (பிப்ரவரி 28) நாளினை நினைவு கூறும் வகையிலேயே 1987ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இவ்விழா தேசிய அறிவியல் நாளாக நாடு முழுமையும் கொண்டாடப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்ட எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினர், தொடர்ந்து கணிதப் புதிர்கள் கூறப்பட்டு மாணவர்கள் அதற்கு விடை அளித்தனர்.
பின்னர் நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திருமதி நா. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோரும் பள்ளி மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.