வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தலைமைப் பண்பு வளர் பயிற்சி ( School Leadership Development Programme for Headmasters)



       இன்று (15.02.2016) கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலக பயிற்சி அரங்கத்தில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  தலைமைப் பண்பு வளர் பயிற்சி ( School Leadership Development Programme for Headmasters) எனும் பயிற்சி முற்பகல் 9.30 மணிக்கு இறை வணக்கத்துடன் துவங்கியது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 18 தலைமை ஆசிரியர்களும், தருமபுரி மாவட்டத்தில் இருந்து 15 தலைமை ஆசிரியர்களும் ஆக மொத்தம் 33 பேர் கலந்துக்கொண்டனர்.
       முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு காவேரி அவர்கள் பயிற்சிக்கு வந்திருந்த அனைத்து தலைமை ஆசிரியர்களையும் வரவேற்று, பயிற்சியைப் பற்றிய கருத்துரைகளை வழங்கியும், இப்பயிற்சி முகாமுக்கு செய்யப்படுள்ள ஏற்பாடுகள் பற்றியும் கூறி, தனது சுய அறிமுகத்தோடு பயிற்சிக்கு வந்துள்ள கருத்தாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அறிமுகத்தை துவக்கி வைத்தார்.
       பின்னர் பயிற்சிக் கருத்தாளர் திரு பி. சென்னி வீரப்பா அவர்கள் தமிழ் மொழி வாழ்த்தோடு தனது உரையைத் துவங்கி பயிற்சியின் நோக்கம், அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். அடுத்து முதல் செயல்பாடாக தமக்குத் தெரிந்த ”பயிற்சி” எனும் சொல்லுக்கு இணையான சொற்களை அனைத்து பயிற்சியாளர்களும் எழுத கேட்டுக்கொண்டார். அனைத்து ஆசிரியர்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்றனர், நான் 21 இணைச் சொற்கள் எழுதி வாசித்தேன். அதேபோல் மற்றவர்களும் வாசித்தனர். இதன் மூலம் பயிற்சி எனும் சொல்லுக்கு மேம்பாடு எனும் பொதுச்சொல் புதுச்சொல்லாக அறிமுகப்படுத்தப்பட்டது.
       தேநீர் இடைவேளைக்குப் பின் அடுத்த கருத்தாளர் திரு மாதேஸ்வரன் அவர்கள் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். அவர் அடுத்த செயல்பாடாக அனைவரும் 
1. இப்பயிற்சி தொடர்பாக தங்களின் எதிர்பார்ப்புகள், 
2. தாங்கள் பள்ளியில் எதிர்கொள்ளும் சவால்கள்……
       ஆகியன குறித்து மூன்று, மூன்று கருத்துகள் எழுதச் செய்தார். பின்னர் அவைகளை அனைத்து ஆசிரியர்களும் தனித்தனியே கூறுமாறு கேட்டுக்கொண்டார். இதன் மூலம் இப்பயிற்சி குறித்து ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி அறிய முடிந்தது. அத்தோடு   பள்ளிகளில் தினமும் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும், அதற்கான தீர்வுகளாக தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் தமது அனுபவக் கருத்துக்களைக் கூறியது அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. 
       அடுத்த வகுப்பில் ”நேர்மை” மற்றும் “காலந்தவறாமை” என்ற சொற்களுக்கான இணைச் சொற்கள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் பற்றி பயிற்சியாளர்கள் எழுதச் செய்து, அவற்றை வாசிக்கச் செய்யப்பட்டது. இதில் காலந்தவறாமை என்பது தலைமை ஆசிரியர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து உணத்தப்பட்டது.
         பிற்பகல் உணவு இடை வேளைக்குப் பின்னர் அனைத்து ஆசிரியர்களும் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு …..
1.   அகிம்சைத் தலைவர், 
2. ஜனநாயகத் தலைவர், 
3. சர்வாதிகாரத் தலைவர்
             ஆகிய மூன்று வகையான தலைவர்கள் குறித்த கருத்துக்களை வண்ண அட்டைகளில் எழுதும் செயல்பாடு குழுச் செயல்பாடாக வழங்கப்பட்டது. அச்செயல்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்த போதே கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  திரு வே. தமிழரசு அவர்கள் வந்து கலந்துக்கொண்டு பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல கருத்துக்களை கூறி, பின்னர் பயிற்சியில் கலந்துக் கொண்டுள்ள தலைமை ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் செய்த சாதனைகள்  பற்றி கூறச் செய்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
       அடுத்ததாக இம்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறப்புத் திட்டமான “இல்லம் நோக்கும் பள்ளி” எனும் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி தென்றல் மகேஷ்குமார் அவர்கள் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும், அதன் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக கூறியதோடு மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி மற்றும் வாழ்க்கைக்கான விழிப்புணர்வுக் கருத்துக்கள் பற்றியும் கூறினார்.
       இறுதியாக மூவகைத் தலைவர்கள் குறித்து பயிற்சியாளர்கள் வண்ண அட்டைகளில் தமது குழு விவாதத்தின் மூலம் எழுதியிருந்த கருத்துக்களை தனித்தனியே குழுத் தலைவர்கள் வழங்கினர். இதில் மூவகையான தலைவர்களின் தலைமைத்துவம் பற்றியும் அதன் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக அறிய முடிந்தது.
   இதன் மூலம் இச்செயல்பாட்டின் மையக் கருத்தாக அனைவரும் ஜனநாயகத் தலைவர்களாக இருப்பதே சிறந்தது என்ற கருத்து எட்டப்பட்டு இன்றைய இன்றைய நாள் இனிமையாக நிறைவடைந்தது.








சனி, 13 பிப்ரவரி, 2016

நாளிதழ்களில் எமது பள்ளிச் செய்தி......

 
 தினகரன் நாளிதழ்
         எமது பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் விழா தொடர்பான செய்திகள் தினகரன், தினமணி, தினச் சுடர் ஆகிய நாளிதழ்களில் வண்ணப்படம் மற்றும் கருப்பு வெள்ளை படங்களுடன் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட தினகரன், தினமணி, தினச்சுடர் நாளிதழ்களின் செய்தி ஆசியர்களுக்கும் செய்தி முகவர்களுக்கும் நன்றி......
 தினச்சுடர் நாளிதழ்
தினமணி நாளிதழ்

புதன், 10 பிப்ரவரி, 2016

தேசிய குடற்புழு நீக்க நாள்.....,

              ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று 10.02.2016ல் கடைபிடிக்கப்பட்டது......
          பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
              பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தேசிய குடற்புழு நீக்க நாளின் அவசியம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றியும், வயிற்றில் காணும் குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் இந்தியா முழுதும் இன்று 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை போது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மேற்கொண்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.
               பின்னர் பேசிய கிராம சுகாதார செவிலியர் திருமதி கௌரி அவர்கள் பொது மக்களின் நோய்கள் தடுப்பதில் சுகாதார துறையின் பணிகள் பற்றி பேசினார்.
                பின்னர் பள்ளியில் இருந்த அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
            நிகழ்வில் கிராமக் கல்விக் குழு தலைவர் திரு தி. பூபதி, உதவி ஆசிரியர்கள் திருமதி நா.திலகா, த. லதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

















செவ்வாய், 26 ஜனவரி, 2016

67 வது இந்திய குடியரசு தின விழா




ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2016) 67வது இந்திய குடியரசு தினவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை சரியாக 9.00 மணிக்கு பள்ளியில் இந்திய தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா, திருமதி த. லதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு குறித்தும், இவ்விழா நடத்தப்படுவதன் காரணம் குறித்தும் விரிவாக விளக்கியதோடு நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகங்கள் குறித்தும் கூறி அதுபோல மாணவர்களும் சமுதாயத் தொண்டு ஆற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் இந்தியக் குடியரசு தின விழா குறித்து உரையாடினர், மேலும் தேசபக்திப் பாடல்களைப் பாடினர், அடுத்து   தேசபக்திப் பாடல்கள் பாடும் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி   ஆகியவற்றில் வெற்றி பெற்ற  பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி கிராமக் கல்விக்குழுத் தலைவர் திரு டி. பூபதி, சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் உள்ளிட்ட பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.