செவ்வாய், 15 நவம்பர், 2011

கல்வி உரிமைநாள் விழா.........

               எமது பள்ளியில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், இந்தியாவிற்கு தனியான ஒரு கல்விமுறை வேண்டும் என்று பாடுபட்டவருமான மாண்புமிகு  மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் கல்வி உரிமை நாள் விழாவாக நடைபெற்றது.
                   அப்போது பள்ளித்தலைமை ஆசிரியரால் மாண்புமிகு  மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை, சேவைகள் மற்றும் இந்திய கல்வி முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டது.
                பின்னர் அன்னாரின் பிறந்தநாள் விழாத் தொடர்பாக இந்தியப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு கபில் சிபல், தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா ஆகியோர் அனுப்பி வைத்திட்ட கடிதங்கள் மாணவர்களுக்கு படித்து காண்பிக்கப்பட்டது.





வெள்ளி, 11 நவம்பர், 2011

இலவசத் தனிப்படிப்பு மையத் துவக்கவிழா.......

                  இன்று 09.11.11 எமது பள்ளி கிராமமான கொட்டுகாரம்பட்டியில் புதியத் தலைமுறை அறக்கட்டளையின் கிராமப்புற கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இலவச தனிப்படிப்பு மையம் (FREE TUTION CENTER) துவக்கப்பட்டது.
                  முன்னதாக    மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மையப் பொருப்பாசிரியர்களில் ஒருவரான திருமதி அனிதா வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு பி.சக்திவேல் அவர்கள் புதிய தலைமுறை அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார். மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருமதி மாதம்மாள் அவர்கள் வாழ்த்து கூற ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர் திரு டி.எல் சின்னசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் பொருப்பாசிரியர்களில் ஒருவரான செல்வி க. கலையரசி அனைவருக்கும் நன்றி கூறினார்.
                     இம்மையத்தில் 5 முதல் 10 வகுப்பு வரையில் பயிலும் 50 மாணவர்கள் பயிற்சி பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் படிப்பது என்பது அரிதான செயல். எனவே இது போன்ற மையங்கள் மிகுந்த பயனை விளைவிக்கும் என்பது உறுதி.



வியாழன், 3 நவம்பர், 2011

சிறப்புப் பார்வை

எமது பள்ளிக்கு இன்று ஆந்திர மாநிலத்திலிருந்து தேசிய வளர்ச்சி அறக்கட்டளை (NATIONAL DEVELOPEMENT TRUST) எனும் அமைப்பிலிருந்து அதன் தலைவர் திரு இரவி மற்றும் இயக்குநர்கள் இராமானுஜம், இரகு  ஆகியோர் எமது பள்ளி அமைந்துள்ள மூன்றம்பட்டி சிற்றூராட்சியை சிறந்த சுகாதாரமான ஊராட்சிக்கான நிர்மல் புரஸ்கார் விருது வழங்கிட தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவினராக வருகைபுரிந்தனர். உடன் ஊத்தங்கரை ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், மூன்றம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திருமதி உஷாராணி குமரேசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வந்தனர்.

அப்போது அவர்கள் பள்ளி சுகாதாரம் மற்றும் மாணவர்களின் தன் சுத்தம் பற்றி விரிவாக ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளியின் சுத்தமான கழிவறைகள், திடக்கழிவு மேலாண்மையின் கீழ் பராமரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காதக் குப்பைக்கான குப்பைக் குழிகள், பள்ளி மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம் உள்ளிட்டவைகளையும் பள்ளிக்கான பிரத்தியேக வலைப்பூவான ”கல்விக்கோயில்” ஆகியவற்றையும் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர். அப்போது பள்ளி வளாகமானது ஓர் சுற்றுலாத் தளம் போல் காட்சி அளிப்பதாக குழுவின் தலைவர் திரு இரவி அவர்கள் குறிப்பிட்ட போது அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளிப் பெற்றோர்கள் பெருத்த மகிழ்வைத் தெரிவித்தனர்.  









சனி, 15 அக்டோபர், 2011

சர்வதேசக் கைகள் கழுவும் தினம் – 2011

    எமது பள்ளியில் இன்று சர்வதேசக் கைகள் கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். ஒன்றிய வள மைய ஆசிரியப் பயிற்றுனர் திருமதி தி. இசைஅருவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் சர்வதேசக் கைகள் கழுவும் தினத்தின் அவசியம் பற்றியும், சரியாகக் கைகள் கழுவாமையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். அதில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை பற்றியும் அதில் கூறப்பட்டுள்ள  பல செய்திகளையும் மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.. இன்று உலகில் இறக்கும் குழந்தைகளில் மூன்றில் இருவர் வயிற்றுப் போக்கு மற்றும் சுவாச நோய் ஆகியவற்றால்தான் என்றும் அதற்கு காரணமான பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் பெருமளவில் வாய் மூலமே உடலுக்குள் நுழைகிறது என்றும் அக்கிருமிகள் பரவ மலம் ஓர் காரணம் என்றும், ஒரு கிராம் மனித மலத்தில் ஒரு கோடி வைரஸ்களும், பத்து இலட்சம் பாக்டீரியாக்களும் உள்ளன என்றும் கூறினார். இதைத் தடுக்க நாம் அனைவரும் கட்டாயமாக சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைப் பயன்பாட்டுக்குப் பின்பும் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

     பின்னர் கைகளை சோப்புப் போட்டு முறையாகக் கழுவவேண்டிய முறை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டியதோடு, நாம் அனைவரும் நமது கைகள் சுத்தமாக உள்ளன என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் உண்மையிலேயே சுத்தமாகத்தான் உள்ளனவா என சோதித்தறிய நான்கு கண்ணாடி குவளைகள் மூலம் சோதனை செய்து காட்டப்பட்ட போது மாணவர்கள் மலைத்துவிட்டனர்.
     பின்னர் சர்வதேசக் கைகள் கழுவும் தின உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது.   








வியாழன், 8 செப்டம்பர், 2011

ஆசிரியர் தினத்தில் அரசுப் பள்ளிகளுக்கான பரிசு.


இவ்வாண்டு ஆசிரியர் தினத்தன்று ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஒன்றியத்தில் உள்ள 5 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து ஒவ்வோர் பள்ளிக்கும் தலா இரண்டு மின்விசிறிகள் வழங்கப்பட்டது. முன்னதாக வங்கியின் கிளை மேலாளர் திரு எம். நவீந்திரன் அவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் தேவை மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் பள்ளிகளைத் தேர்வு செய்தார். அதன்படி சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை வங்கிக்கு வரவழைத்து அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து பின்னர் மின் விசிறிகளை வழங்கினார்.
இந்நிகழ்வு இங்கு மட்டுமா? என வினவிய போது நமக்கு அதிர்ச்சி. காரணம் இந்தியாவில் உள்ள 16000 கிளைகளிலும் இது போல் ஒவ்வோர் கிளை சார்பிலும் 10 மின் விசிறிகள் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன என்றத் தகவல் கிடைத்தது. அப்படியானால் ஒரே நாளில் நாடு முழுமைக்கும் 1,60.000 மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் பெருமைபடத் தக்க நிகழ்வாகும். ஏற்கனவே பெண்குழந்தைகள் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் அரசுப் பள்ளி பெண் குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவித்தொகை வழங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கி இது போல் இன்னும் பல நிகழ்வுகள் மூலம் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறைச் செலுத்துமாக.

புதன், 17 ஆகஸ்ட், 2011

65 வது இந்தியச் சுதந்திர தினவிழா.

15.08.2011 இந்தியத் திருநாட்டின் 65 வது சுதந்திர தின விழா எமது பள்ளியில் வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. முதலில் பள்ளியில் பள்ளி கல்விக் குழுத் தலைவர் திரு இராதாநாகராஜ் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்திட  பள்ளி விழா துவங்கியது.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் இலக்கியப் போட்டிகளும் நடைபெற்றது. அதன் பின் புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஏற்பாட்டின் பேரில் சிறப்புக் கருத்தரங்கம் பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவோடு துவங்கியது.
விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான    திரு இராதாநாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  திரு கொ.பா.திருவேங்கடம், துனைத் தலைவர் திரு கொ. மா. எத்திராசு, திருஜெயராமன், நல்லவன்பட்டி புதூர் தலைமை ஆசிரியர் திரு பா. ஆறுமுகம், புதிய தலைமுறை அறக்கட்டளையின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பா. சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் புதிய சமச்சீர்கல்வி பாட நூல்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.
அதன்பின் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் திரு சி. கோவிந்தராஜ் அவர்கள் ஆளுமைத் திறன் மேம்பாடு எனும் தலைப்பிலும், திரு. செந்தில்நாதன் அவர்கள் மின் சிக்கனம் எனும் தலைப்பிலும் கருத்துரை நிகழ்த்தினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு பி. பாண்டுரங்கன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மற்ற உதவி ஆசிரியர்களான திருமதி சி. தாமரைச்செல்வி, திரு.சே. லீலாகிருஷ்ணன், திரு. நா. இராஜசூரியன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.