சனி, 15 அக்டோபர், 2011

சர்வதேசக் கைகள் கழுவும் தினம் – 2011

    எமது பள்ளியில் இன்று சர்வதேசக் கைகள் கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். ஒன்றிய வள மைய ஆசிரியப் பயிற்றுனர் திருமதி தி. இசைஅருவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் சர்வதேசக் கைகள் கழுவும் தினத்தின் அவசியம் பற்றியும், சரியாகக் கைகள் கழுவாமையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். அதில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை பற்றியும் அதில் கூறப்பட்டுள்ள  பல செய்திகளையும் மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.. இன்று உலகில் இறக்கும் குழந்தைகளில் மூன்றில் இருவர் வயிற்றுப் போக்கு மற்றும் சுவாச நோய் ஆகியவற்றால்தான் என்றும் அதற்கு காரணமான பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் பெருமளவில் வாய் மூலமே உடலுக்குள் நுழைகிறது என்றும் அக்கிருமிகள் பரவ மலம் ஓர் காரணம் என்றும், ஒரு கிராம் மனித மலத்தில் ஒரு கோடி வைரஸ்களும், பத்து இலட்சம் பாக்டீரியாக்களும் உள்ளன என்றும் கூறினார். இதைத் தடுக்க நாம் அனைவரும் கட்டாயமாக சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைப் பயன்பாட்டுக்குப் பின்பும் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

     பின்னர் கைகளை சோப்புப் போட்டு முறையாகக் கழுவவேண்டிய முறை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டியதோடு, நாம் அனைவரும் நமது கைகள் சுத்தமாக உள்ளன என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் உண்மையிலேயே சுத்தமாகத்தான் உள்ளனவா என சோதித்தறிய நான்கு கண்ணாடி குவளைகள் மூலம் சோதனை செய்து காட்டப்பட்ட போது மாணவர்கள் மலைத்துவிட்டனர்.
     பின்னர் சர்வதேசக் கைகள் கழுவும் தின உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது.   








வியாழன், 8 செப்டம்பர், 2011

ஆசிரியர் தினத்தில் அரசுப் பள்ளிகளுக்கான பரிசு.


இவ்வாண்டு ஆசிரியர் தினத்தன்று ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஒன்றியத்தில் உள்ள 5 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து ஒவ்வோர் பள்ளிக்கும் தலா இரண்டு மின்விசிறிகள் வழங்கப்பட்டது. முன்னதாக வங்கியின் கிளை மேலாளர் திரு எம். நவீந்திரன் அவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் தேவை மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் பள்ளிகளைத் தேர்வு செய்தார். அதன்படி சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை வங்கிக்கு வரவழைத்து அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து பின்னர் மின் விசிறிகளை வழங்கினார்.
இந்நிகழ்வு இங்கு மட்டுமா? என வினவிய போது நமக்கு அதிர்ச்சி. காரணம் இந்தியாவில் உள்ள 16000 கிளைகளிலும் இது போல் ஒவ்வோர் கிளை சார்பிலும் 10 மின் விசிறிகள் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன என்றத் தகவல் கிடைத்தது. அப்படியானால் ஒரே நாளில் நாடு முழுமைக்கும் 1,60.000 மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் பெருமைபடத் தக்க நிகழ்வாகும். ஏற்கனவே பெண்குழந்தைகள் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் அரசுப் பள்ளி பெண் குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவித்தொகை வழங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கி இது போல் இன்னும் பல நிகழ்வுகள் மூலம் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறைச் செலுத்துமாக.

புதன், 17 ஆகஸ்ட், 2011

65 வது இந்தியச் சுதந்திர தினவிழா.

15.08.2011 இந்தியத் திருநாட்டின் 65 வது சுதந்திர தின விழா எமது பள்ளியில் வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. முதலில் பள்ளியில் பள்ளி கல்விக் குழுத் தலைவர் திரு இராதாநாகராஜ் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்திட  பள்ளி விழா துவங்கியது.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் இலக்கியப் போட்டிகளும் நடைபெற்றது. அதன் பின் புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஏற்பாட்டின் பேரில் சிறப்புக் கருத்தரங்கம் பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவோடு துவங்கியது.
விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான    திரு இராதாநாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  திரு கொ.பா.திருவேங்கடம், துனைத் தலைவர் திரு கொ. மா. எத்திராசு, திருஜெயராமன், நல்லவன்பட்டி புதூர் தலைமை ஆசிரியர் திரு பா. ஆறுமுகம், புதிய தலைமுறை அறக்கட்டளையின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பா. சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் புதிய சமச்சீர்கல்வி பாட நூல்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.
அதன்பின் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் திரு சி. கோவிந்தராஜ் அவர்கள் ஆளுமைத் திறன் மேம்பாடு எனும் தலைப்பிலும், திரு. செந்தில்நாதன் அவர்கள் மின் சிக்கனம் எனும் தலைப்பிலும் கருத்துரை நிகழ்த்தினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு பி. பாண்டுரங்கன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மற்ற உதவி ஆசிரியர்களான திருமதி சி. தாமரைச்செல்வி, திரு.சே. லீலாகிருஷ்ணன், திரு. நா. இராஜசூரியன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
























வெள்ளி, 22 ஜூலை, 2011

களப் பயணம்

எமது பள்ளி மாணவர்களை களப் பயணமாக ஊத்தங்கரை அழைத்துச் சென்றோம். அப்போது முதலாவதாக பார்வையிட்ட இடம் தீயனைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் அங்கு நிலைய அலுவலர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்களின் பணி மற்றும் அதற்காகப் பயன்படுத்தும் கருவிகள் பற்றியும் சிறப்பாக விளக்கினர். பின்னர் காவல் நிலையம் சென்ற மாணவர்களுக்கு அங்கிருந்த காவல் துணை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக வரவேற்று அவர்களின் பல்வேறு பணி நிலைகள் பற்றியும் பொறுப்புகள் பற்றியும் எடுத்துக் கூறியதோடு அவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கம்பியில்லா தொலைபேசிக் கருவியான ஒயர்லஸ், வாக்கிடாக்கி ஆகியவற்றைக் காட்டி செயல் முறை விளக்கமளித்தனர். அடுத்ததாக பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்ற பொழுது அங்கே வங்கியின் பல்வேறுபட்ட சேவைகள் மற்றும் பொது மக்களோடு உள்ளத் தொடர்பு  ஆகியவை பற்றி வங்கி அலுவலர் விளக்கினார். அடுத்து கணினி நூலகம் சென்று அங்கு உள்ள 30க்கு மேற்பட்ட கணினிகளை ஒரே இடத்தில் பார்த்து வியந்தனர். மேலும் அங்கு இருந்த போட்டித் தேர்வுகளுக்கான நூல்களையும் பார்வையிட்டனர்.  அடுத்து அரசு பொது நூலகம் சென்ற போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் அவை கதை, கட்டுரை நாவல், கவிதை, பொது அறிவு, வரலாறு, இலக்கியம் போன்ற பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டிருந்தக் காட்சி மாணவர்களைக் கவர்ந்தது. இக் களப் பயணம் மூலம்  மாணவர்கள் மிகப் பல செய்திகளை செயல் முறை விளக்கங்களோடு நேரிடையாக கற்றுககொண்டமை பயனுள்ளதாக அமைந்தது.