திங்கள், 6 ஜனவரி, 2020

புதியதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வரவேற்பு விழா….




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (06.01.2020) புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது.
பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத்திற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு தி. வெங்கடேசன் உள்ளிட்ட சிற்றூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு விழாவும், பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக்குறிப்பு ஏடுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் புதிதாக தேர்வு பெற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தனது வாழ்த்துக்களையும், வரவேற்பையும் பள்ளியின் சார்பில் கூறி அவர்கள் ஆற்ற வேண்டிய சமுதாய கடமைகள் மற்றும் சேவைகள் குறித்தும் விரிவாக விளக்கி பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில்
”ஈன்ற பொழுதின்  பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்........”
எனும் குறளை நினைவு கூர்ந்து, இன்று சிற்றூராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கடேசன் தனது மாணவர் என்பதை அனைவருக்கும் எடுத்துக் கூறி, ஒருதாய் தந்து குழந்தையை 10 மாதம் சுமந்து பெற்றபோது அடையும் மகிழ்ச்சியைவிட, கற்றோரும் மற்றோரும் நிறைந்த அவைதனிலே சான்றோன் எனக் கேட்பதை  மிகவும் பெருமையாகக் கொள்வாள் அதுபோல தான் இப்போது பெருமை கொள்வதாகக் கூறி மகிழ்ந்தார்.
            வரவேற்பையும் பாராட்டுகளையும் ஏற்றுக்கொண்டு பேசிய  சிற்றூராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் அவர்கள் தந்து உரையில் தான் இவ்வளவு உயரத்திற்கு வளர காரணமான ஆசிரியர்களுக்கு நன்றி கூறி, பதவி ஏற்று முதல் நிகழ்ச்சியே பள்ளி நிகழ்ச்சி என்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும், தனது பதவிக் காலத்தில், ஜோதிநகர் பள்ளியின் தலைமை ஆசிரியரும், எனது வழிகாட்டியுமான ஐயா செ. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலுடன்  கெங்கபிராம்பட்டி ஊராட்சியை  தமிழகத்தின் சிறந்த ஊராட்சியாக உயர்த்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களோடு செயல்படுவேன் எனக்கூறினார்.
            நிகழ்வில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காமராஜ்நகர் திரு தேவராஜ், நாச்சகவுண்டனூர் திருமதி விஜயகுமாரி பிரகாஷ், மண்ணான்டியூர் திருமதி கோவிந்தம்மாள் சுரேஷ், மற்றும் உதவி ஆசிரியர்கள் திரு வே. இராஜ்குமார், திரு. ஜி.எம். சிவக்குமார், திருமதி நித்யா ஆகியோரும், கிராம பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.