சனி, 5 ஏப்ரல், 2014

மாணவர் சேர்க்கை விழா



ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது.
     2014 – 15 கல்வி ஆண்டுக்கான முதலாம் வகுப்பு ஆங்கிலப் பிரிவு மாணவர் சேர்க்கை விழா இன்று 04.04.2014 காலை பள்ளியில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அனைவரையும் வரவேறார். முன்னதாக சரஸ்வதி பூசையுடன் துவங்கிய விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் தற்போது பள்ளியில் உள்ள பல நவீன வசதிகள் பற்றியும், பள்ளியில் உள்ள மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கான பல்வேறு வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களே இன்றைய சமூகத்தில் வெளிப்படும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை பெறுகிறார்கள் எனவும் கூறி அனைத்து பெற்றோர்களும் தமது குழந்தைகளை தயங்காமல் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
மாணவர் சேர்க்கை துவங்குவதற்கு முன்பாக இப்பள்ளியில் தற்போது படித்து வரும் 1,2 வகுப்பு மாணவர்களின் திறன் வெளிப்பாடாக பல்வேறு கற்றல் செயல்பாடுகளும் 1,2 வகுப்பு மாணவர்களால் செய்து காட்டப்பட்ட்து. அதில் பெ. கலையரசி என்ற இரண்டாம் வகுப்பு மாணவி 15 வரையில் பெருக்கல் வாய்ப்பாட்டை மனப்பாடமாகக் கூறியது அனைவரையும் வியக்க வைத்தது.
பின்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் அவர்கள் புதிய மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.  அவர் தமது உரையில் அடுத்த ஆண்டு முதல் இப்பள்ளியில் முதல் வகுப்பில் ஆங்கிலப் பிரிவு துவங்க உள்ளதால் அனைத்து பெற்றோர்களும் இதைப் பயன்படுத்திக்கொண்டு தமது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இன்று இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் எழுது பொருட்களுடன் கூடிய புத்தகப் பை இலவசமாக வழங்கப்பட்டது. இதை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க பொருப்பாசிரியராகப் பணிபுரியும் திரு கு. கணேசன் அவர்கள் வழங்கினார். அவர் அடுத்துவரும் இரு ஆண்டுகளுக்கு தமது மாதாந்திர ஊதியத்தில் 20% தொகையை பள்ளி மாணவர்களின் நலனிற்காக செலவிடுவதாக தமது பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கனகராணி மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் செய்தனர்
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு. சாரதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

























வெள்ளி, 21 மார்ச், 2014

உலக வனநாள் விழா



இன்று 21.03.2014 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக வனநாள்  விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி மாணவர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி சுற்றுச் சூழல் மன்றப் ஒருங்கினைப்பாளர் திருமதி மு.இலட்சுமி  உதவி ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமைஆசிரியர் தமது தலைமை உரையில் உலக வனநாள் விழாவின் அவசியம் மற்றும் வனங்களால் நமக்கு ஏற்படும் நண்மைகள் குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டுமெனவும் மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் உலக வனநாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி சு சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.