வியாழன், 2 ஜனவரி, 2014

மூன்றாம் பருவம் - விலையில்லாப் பொருட்கள் வழங்கல்

               இன்று (02.01.2014) எமது பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள் வழங்கப்பட்டது.
        இன்று மூன்றாம் பருவம் துவக்க நாள், இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து தமிழகம் முழுதும் புத்தாண்டில் பள்ளிகள் துவங்கின. அதன் அடிப்படையில் இன்று எமது பள்ளியும் துவங்கியது. பள்ளி துவங்கிய முதல் நாளான இன்று முன்னதாக பெற்று வந்திருந்த மாணவர்களுக்கான மூன்றாம் பருவ விலையில்லா பாட நூல்களும், பாடக் குறிப்பேடுகளும், நான்காம் இணைச் சீருடைகளும் இன்று வழங்கபட்டது. அதைப் பெற்ற மாணவர்கள் பெறு மகிழ்வு எய்தினர். 












செவ்வாய், 31 டிசம்பர், 2013

பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் (Collaborative Learning through Connecting Class Room across Tamil Nadu) - பயிற்சிப் பட்டறை

                 பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் (Collaborative Learning through Connecting Class Room across Tamil Nadu) செயல்படுத்தப்பட உள்ளது.

            மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்னோடிப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறைக் கல்வியை மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும், பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
              இதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஓர் உதவி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை தமிழகத்தின்  சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நான்கு மண்டலங்களில் நடைத்தப்பட்டது.
          அதன்படி  கோவை இராஜவீதியில் உள்ள கோவை துணி வர்த்தகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (30.12.2013)  நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி  ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். அதில் எமது பள்ளி சார்பில் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் ஆகிய நானும் உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதாவும்  கலந்துக்கொண்டோம்.
            காலை 10.30 மணிக்கு துவங்கிய   முதல் அமர்வில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி அ. ஞானகௌரி அவர்கள் தலைமையில்  துவக்க விழா நடைபெற்றது. அதில் அவர் தமது தலைமை உரையில் இன்றைய கணினி உலகத்தில் நமது மாணவர்களை அழைத்துச் செல்லவேண்டியதன் அவசியம் பற்றியும் அதற்கு இந்த புதிய கற்பித்தல் முறை மிகவும் பயன்படும் எனவும் ஆசிரியர் பற்றாகு குறை உள்ள பள்ளிகளுக்கு இத்திட்டம் மிகவும் பயன் தரும் எனவும் கூறினார். அடுத்து சிறப்புரை ஆற்றிய கரூர் மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலரும் இத்திட்டதின் மாநில ஒருங்கிணைப்பாளருமான திருமதி சி ஜெயலட்சுமி அவர்கள் இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நடைமுறை கோட்பாடுகள் பற்றிக் கூறினார். மேலும் இத்திட்டம் கரூர் மாவட்ட 5 பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியதில் கிடைத்தை அனுபவங்களையும், அதன் பயன்பாடுகளையும் எடுத்துக் கூறினார். 
         முன்னதாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். இறுதியில்  கோவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு பி. ஜெயராஜ் அவர்கள் இன்றைய கல்வி வளர்ச்சிக்கு பயன்படும் பல்வேறு திட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் இத்திட்டத்தை அனைவரும் திறம்பட செயல்படுத்திட வேண்டும் எனவும் கூறி அனைவருக்கும் நன்றி கூறினார். இப்பயிற்சிப்பட்டறையில் கருத்தாளர்களாக திரு இரா. முருகேசன், திருமதி மா. உமா, திருமதி கா. செல்வநாயகி, திரு செ. ஜெரால்டு ஆரோக்கியராஜ்  ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
           அடுத்த அமர்வில் வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதில் இத்திட்டத்தின் பல்வேறு கூறுகளையும் விளக்கிய பின்னர் ஓர் மாதிரி நேர்முக வகுப்பு நடத்திக் காண்பிக்கப்பட்டது, அதில் இங்கு பயிற்சி மையத்தில் இருந்து ஓர் ஆசிரியர் 9 ஆம் வகுப்பு கணித வகுப்பை நடத்திட கணபதி பள்ளியின் மாணவர்கள் தம்து பள்ளியில் இருந்துக்கொண்டு வகுப்பை கவனித்து, சரியான குறிப்புகளை எடுத்தும் இஅங்கிருந்து கேட்ட வினாக்களுக்கு பதில் அளித்தனர்.
               மதிய உணவு இடைவேளைக்குப்பின் துவங்கிய மூன்றாவது அமர்வில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதில் ஆசிரியர்கள் வினவிய பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 
              இறுதியாக நடைபெற்ற நான்காவது அமர்வு மற்றும் நிறைவு விழாவில் பங்கேற்பாளர்களில் மாவட்டத்திற்கு இருவர் (உயர்நிலை/மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்)  தமது பயிற்சி அனுபவங்களை பின்னூட்டங்களாக வழங்கினர். 
                                     











ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பள்ளிகளுக்கு இடையே வகுப்பறை கல்வி இணைப்புத் திட்டம் செயலாக்கம் - எமது பள்ளி தேர்வு


            பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் (Collaborative Learning through Connecting Class Room across Tamil Nadu) செயல்படுத்தப்பட உள்ளது.

            மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்னோடிப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறைக் கல்வியை மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும், பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

         இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வோர் மாவட்டத்திலும் முன்னோடி பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றுக்கு அகன்றகற்றை இணைய இணைப்பு மற்றும் வெப் கேமரா வழங்கப்படுகிறது.

               முன்னோடி பள்ளிகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை வெப் கேமரா மூலம் கணினியில் பதிவு செய்து, மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் காணும் வகையில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ளது. வகுப்பறை இணைப்புத் திட்டத்துக்கு, மாவட்டத்தில் 4 அரசு நடுநிலைப் பள்ளிகள், 4 அரசு உயர் நிலைப் பள்ளிகள் முன்னோடி பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட முன்னோடி பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில், வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
                இப்பட்டியலில் எமது பள்ளியான ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளியும் தேர்வு செய்யப்பெற்றுள்ளது குறித்து மிக்க மகிழ்வெய்துகிறேன். அதற்கான பயிற்சிப்பட்டறை வரும் 30.12.2013 அன்று கோவை செல்கிறேன்.