சனி, 13 ஏப்ரல், 2019

பள்ளியில் கல்வி ஆண்டு நிறைவு விழா - 2019


ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 12.04.2019 ல் 2018-19 கல்வி ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் கடந்த கல்வி ஆண்டு முழுமையும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு சிறப்பு செயல்பாடுகளை பட்டியலிட்டுக் கூறி அவற்றை சிறப்பாக செய்து முடிக்க ஒத்துழைப்பு நல்கிய உதவி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி, இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்பாடுகள் தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு தற்போது எட்டாம் வகுப்பு முடித்து வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அங்கும் சிறப்பாக செயல்பட்டு தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பின்னர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறி இப்பள்ளியின் சிறப்புச் செயல்பாடுகளை குறிப்பிட்டும், மாவட்ட அளவில் அனைத்து சிறப்புச் செயல்பாடுகளிலும் முன்னோடியாக திகழும் பள்ளி  ஜோதிநகர் பள்ளி எனக் கூறி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் ஏற்பாட்டின் பேரில் கொண்டுவரப்பட்ட கேக் பல வண்ண பூமழைக்கிடையில் தலைமை ஆசிரியரால் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா திருமதி ந. திலகா ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து கூறி கருத்துரை வழங்கினர்.
.அடுத்து கடந்த கல்வி ஆண்டில்  பள்ளிக்கு 100% வருகை புரிந்த மாணவர்கள் ச. இனியா, சினேகா, ச. இதம், வே. கோமதி மற்றும்  எட்டாம் வகுப்பு நிறைவு பெறும் மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளும், 1 முதல் 8 ம் வகுப்பு வரையில் பயிலும் சாதனை மாணவர்களுக்கு துபாய் வாழ் சமூக ஆர்வலர் திரு இரவி சொக்கலிங்கம் அவர்கள் வழங்கிய பதக்கங்களும் வழங்கப்பட்டன.
அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் அசைவ உணவும் வழங்கப்பட்டது.
இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி ச. இனியா அனைவருக்கும் நன்றிகூறினார்.