புதன், 13 டிசம்பர், 2017

பாரதியார் பிறந்தநாள் விழா....


இன்று 11.12.2017 திங்கட்கிழமை ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள்  விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்று இன்றைய விழாவின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் பாரதியாரின் தன்னலமற்ற பங்களிப்புதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு, அவரின் தேசபக்தி, மக்களை விழிப்புணர்வூட்டும் பாடல்கள், பெண்கல்வி, பெண்ணுரிமை தொடர்பான கருத்துக்கள் ஆகியவை பற்றியும் விரிவாக விளக்கி, அனைவரும் பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்று சர்வதேச மலைகள் தினம் என்பதையும், சர்வதேச குழந்தைகள் நல நிதியம் துவக்கப்பட்ட நாள் என்பதையும் கூறி இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி அவர்களின் பிறந்த நாள் என்பதையும் நினைவு கூர்ந்து குறிப்பிட்ட அந்த நாட்களின் சிறப்பு பற்றியும் எடுத்துக் கூறினார்.
பின்னர் மாணவர்கள் பாரதியார் பிறந்தநாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள், திருமதி த. இலதா, திருமதி ந. திலகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக