செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

71 வது இந்திய சுதந்திர தின விழா



ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2017) 71வது இந்திய சுதந்திர தினவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை சரியாக 9.00 மணிக்கு பள்ளியில் இந்திய தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ் அவர்கள் தலைமை தாங்கினார், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேஸ்வரி அவர்கள் முன்னிலை வகித்தார்.
 பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் தமது பள்ளியில் ஆண்டு முழுவதும் அனைத்து விதமான விழாக்கள் நடைபெறுவதையும் அதில் மாணவர்களின் தனித்திறன் வெளிப்படுவதையும் எடுத்துக் கூறினார்.
விழாவில் மாணவர்கள் இந்திய சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில்  தேசபக்தி பாடல்களுக்கான நடனங்கள் ஆடினர். தொடர்ந்து தேசத் தலைவர்கள் குறித்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாணவர்கள் பேசினர். அத்தோடு தேசபக்தி பாடல்களையும், கவிதைகளையும் பாடினர்.
விழாவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு  மு.விஜயராஜ் அவர்கள் தமது தலைமை உரையில் இந்திய சுதந்திர தின விழாவின் சிறப்பு குறித்தும், இவ்விழா நடத்தப்படுவதன் காரணம் குறித்தும் விரிவாக விளக்கியதோடு நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகங்கள் குறித்தும் கூறி அதுபோல மாணவர்களும் சமுதாயத் தொண்டு ஆற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேஸ்வரி அவர்கள் தமது உரையில் இது போன்ற விழாக்களில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்சிகளை நடத்தி அவர்களின் திறமைகளை வளர்ப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது எனக் கூறினார்.
பின்னர் நடனம், தேசபக்திப் பாடல்கள் பாடும் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறகு என்னும் தொண்டு நிறுவனம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள், திருமதி த. லதா, திருமதி ந. திலகா, பள்ளி சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் உள்ளிட்ட அதிக அளவிலான பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.