செவ்வாய், 15 நவம்பர், 2011

குழந்தைகள் தினவிழா........

எமது பள்ளியில் இன்று 14.11.2011 ல் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் விழா குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்பட்டது.
               விழாவிற்கு மூன்றம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திருமதி உஷாராணி குமரேசன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் திரு கே.பி. திருவேங்கடம், துணைத் தலைவர் திரி கே.எம்.எத்திராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு ஜெயராமன், பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலர் திரு சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் பாரத் ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் திரு எம். நவீந்தரன் அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் . விழாவில் பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டது.
                இறுதியில் பள்ளி உதவி ஆசிரியை திருமதி சி. தாமரைச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.



















கல்வி உரிமைநாள் விழா.........

               எமது பள்ளியில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், இந்தியாவிற்கு தனியான ஒரு கல்விமுறை வேண்டும் என்று பாடுபட்டவருமான மாண்புமிகு  மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் கல்வி உரிமை நாள் விழாவாக நடைபெற்றது.
                   அப்போது பள்ளித்தலைமை ஆசிரியரால் மாண்புமிகு  மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை, சேவைகள் மற்றும் இந்திய கல்வி முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டது.
                பின்னர் அன்னாரின் பிறந்தநாள் விழாத் தொடர்பாக இந்தியப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு கபில் சிபல், தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா ஆகியோர் அனுப்பி வைத்திட்ட கடிதங்கள் மாணவர்களுக்கு படித்து காண்பிக்கப்பட்டது.





வெள்ளி, 11 நவம்பர், 2011

இலவசத் தனிப்படிப்பு மையத் துவக்கவிழா.......

                  இன்று 09.11.11 எமது பள்ளி கிராமமான கொட்டுகாரம்பட்டியில் புதியத் தலைமுறை அறக்கட்டளையின் கிராமப்புற கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இலவச தனிப்படிப்பு மையம் (FREE TUTION CENTER) துவக்கப்பட்டது.
                  முன்னதாக    மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மையப் பொருப்பாசிரியர்களில் ஒருவரான திருமதி அனிதா வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு பி.சக்திவேல் அவர்கள் புதிய தலைமுறை அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார். மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருமதி மாதம்மாள் அவர்கள் வாழ்த்து கூற ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர் திரு டி.எல் சின்னசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் பொருப்பாசிரியர்களில் ஒருவரான செல்வி க. கலையரசி அனைவருக்கும் நன்றி கூறினார்.
                     இம்மையத்தில் 5 முதல் 10 வகுப்பு வரையில் பயிலும் 50 மாணவர்கள் பயிற்சி பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் படிப்பது என்பது அரிதான செயல். எனவே இது போன்ற மையங்கள் மிகுந்த பயனை விளைவிக்கும் என்பது உறுதி.



வியாழன், 3 நவம்பர், 2011

சிறப்புப் பார்வை

எமது பள்ளிக்கு இன்று ஆந்திர மாநிலத்திலிருந்து தேசிய வளர்ச்சி அறக்கட்டளை (NATIONAL DEVELOPEMENT TRUST) எனும் அமைப்பிலிருந்து அதன் தலைவர் திரு இரவி மற்றும் இயக்குநர்கள் இராமானுஜம், இரகு  ஆகியோர் எமது பள்ளி அமைந்துள்ள மூன்றம்பட்டி சிற்றூராட்சியை சிறந்த சுகாதாரமான ஊராட்சிக்கான நிர்மல் புரஸ்கார் விருது வழங்கிட தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவினராக வருகைபுரிந்தனர். உடன் ஊத்தங்கரை ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், மூன்றம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திருமதி உஷாராணி குமரேசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வந்தனர்.

அப்போது அவர்கள் பள்ளி சுகாதாரம் மற்றும் மாணவர்களின் தன் சுத்தம் பற்றி விரிவாக ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளியின் சுத்தமான கழிவறைகள், திடக்கழிவு மேலாண்மையின் கீழ் பராமரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காதக் குப்பைக்கான குப்பைக் குழிகள், பள்ளி மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம் உள்ளிட்டவைகளையும் பள்ளிக்கான பிரத்தியேக வலைப்பூவான ”கல்விக்கோயில்” ஆகியவற்றையும் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர். அப்போது பள்ளி வளாகமானது ஓர் சுற்றுலாத் தளம் போல் காட்சி அளிப்பதாக குழுவின் தலைவர் திரு இரவி அவர்கள் குறிப்பிட்ட போது அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளிப் பெற்றோர்கள் பெருத்த மகிழ்வைத் தெரிவித்தனர்.